நேபாளத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து 100 மீட்டர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் பலியானதுடன், 18 பேர் காயமடைந்தனர்.
டோலகா மாவட்டம் காளின்சோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு ஒரு பேருந்தில் சென்ற பக்தர்கள் பக்தபூர் நகருக்கு நேற்று திரும்பிக்கொண்டிருந்தபோதே இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிந்துபால்சாக் பகுதியில் அரணிகோ நெடுஞ்சாலையில் பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 80கி.மீ. தொலைவில் இருக்கிறது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 குழந்தைகள் உள்ளிட்ட 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, காயமடைந்த 18 பேரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது பேருந்து நடத்துநர் பேருந்தில் இருந்து குதித்துத் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடி வருகிறோம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஒரு மாதத்துக்குள் இடம்பெற்ற இரண்டாவது பெரிய விபத்து இதுவாகும். கடந்த நவம்பர் 17 ஆம் திகதி சங்கோரி ஆற்றில் பேருந்து ஒன்று கவிழ்ந்து 17 பேர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.